இன்பமே எந்நாளும் துன்பமில்லை
நமக்கு ஒருவரை பிடிக்காது என்று பொய் சொல்லக்கூட நாம் ஒருபோதும் தயங்குவதில்லை ஆனால் பிடித்திருகிறது என்று சொல்ல அவ்வளவு தயக்கம்,பொய்யாக சொல்லக்கூட மனம் வருவதில்லை. மிருகங்களின் பலம் அடக்கி ஆள்வதில் இருப்பதைப்போல நம் பலம் அன்பால் ஆள்வதில் இருக்கிறது
வேலை செய்யுமிடத்திலும் வியாபாரத்திலும் நமக்கு பிடிக்காவிட்டாலும் நாம் சிரித்து பேசுகிறோம் ஆனால் நம் சொந்த வாழ்வில்? கோபத்தின் விளைவு பகை,வருத்தத்தின் விளைவு மனத்தாங்கல், கேலியின் விளைவு எரிச்சல், அனால் அன்பின் விளைவும் விழைவும் அன்பு மட்டுமே.....அன்பு காட்டுவதால் நமக்கு ஏதும் குறையப்போவதில்லை மீறிப்போனால் திருப்பி நேசிக்கப்படுவோம் அவ்வளவுதானே! உலகில் அனைவருமே நேசிக்கப்பட விரும்புகிறோம் நேசிப்பவர்களை நினைவு வைத்திருக்கிறோம் ஆனால் ஏன் நாம் நேசிக்கவோ அல்ல நேசத்தைப் பெற்றுக்கொள்ளவோ தயங்குகிறோம்..
தினமும் ஒருமுறையேனும் நம்மை சார்ந்தவர்களிடம் அவர்களை நமக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்லுங்கள், தினமும் ஒரு புதியவர் முகத்தில் சிரிப்பை வரவழையுங்கள் உங்கள் பலம் எவ்வளவு பெருகுகிறது என்று தெரிந்து கொள்வீர்கள்..அன்பு மட்டுமே உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொதுமொழி, நாய்க்குட்டிகளை வளர்க்கும் சிங்கம், கடல் பயணங்களில் வழிகாட்டும் டால்பின்கள், ரோஜா செடிகள் என இயற்கை இயன்றவரை அன்பையும் நெருக்கத்தையும் நமக்கு போதிக்கிறது நாம்தான் கவனிப்பதில்லை.
நாம் தினம் தினம் எவ்வளவோ மனிதர்களை கடந்துபோகிறோம் எவ்வளவு முறை அவர்களை சிரிப்புடன் கடந்திருக்கிறோம், புன்னகை மிகவும் பலம் வாய்ந்த சாதனம். நம்மால் எல்லாரையும் நேசிக்க முடியாவிட்டாலும் எல்லாரிடமும் சிரிக்க கண்டிப்பாக முடியும்,சிரிப்பு முகத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சியளித்து நம்மை இளமையாகவும் பொலிவுடனும் வைத்திருக்கும்,எதிரில் உள்ளவர்களை லேசாகவும் உணரவைக்கும் இது அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆனது, அதுவே நம் மனதில் இருந்து நாம் சிரித்தால்?நம்மையும் சேர்த்து லேசாக்கும் அல்லவா?
அன்பு வெறும் மகிழ்ச்சி மட்டும் தருவதில்லை, அதற்கும் மேலான ஒன்றை தருகிறது நம்பிக்கை. நம்பிக்கைதான் நம்மை வழிநடத்தி செல்கிறது, நம்பிக்கைதான் வாழும் ஆசையை தருகிறது. இவை அனைத்துக்கும் அச்சாணியாக இருப்பதுதான் அன்பு.
பிறப்பு முதல் இறப்பு வரை போரிட்டுக்கொண்டே இருக்க வேண்டும், உலகின் சிறந்தவை அனைத்தும் நமக்க வழங்கப்படிருகிறது, மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம் அன்பு, ஆற்றல் நிறைந்த மருந்து சமாதானம், அசைக்க முடியாத கேடயம் நம்பிக்கை...ஆனால் நாம் போரிடப்போவது கொள்வதற்காக இல்லை வெல்வதற்காக..
ஒரு முறையேனும் ஒரே ஒரு முறையேனும் நாம் முயற்சிப்போம் இறைவனே அன்பிற்கு அடிமையாக தயாராக இருக்கிறான் பின் வேறெது அன்பின் பிடியில் இருந்து தப்பிக்கும்..
அன்பு கண் வழியாக மட்டுமல்ல கண்ணீர் வழியாகவும் வெளிப்படும் துன்பத்தில் உள்ளவருக்காக உதவ முன்வருவோம் முடியாவிட்டால் அழவாவது முயற்சிப்போம்.
"யானும் பொய் என் அன்பும் பொய் இருந்தும் வினையேன் அழுதழுது
உனைப் பெறலாமே!"
இந்த திருவாசக வரிகள் கூறும் கடவுள்கூட கண்ணீருக்கு இரங்குவார் என்று..அல்லது கண்ணீருக்கு இரங்கும் மனமே கடவுள் என்றும் கொள்ளலாம்.
வாழ்க்கை ஒரு இனிப்பு பந்து போலத்தான், நிறைய நிகழ்வுகளுடன் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் சந்தோஷம் என உணர்ச்சி கலவைகளால் செய்யப்பட்டது இதில் எதை நாம் எடுக்கிறோமோ அதே சுவைதான் அதிகப்படும்.. உங்கள் தேர்வுகள் உங்கள் வாய்ப்புகள்..நாம் சரியானதை எபோழுதும் தேர்ந்தெடுத்து மற்றவருக்கும் அதை பகிர்ந்தளித்தால் அதாவது அன்பையும் நம்பிகயையும் பகிர்ந்தளித்தால், நமக்கு மட்டுமல்ல யாருக்குமே இன்பமே எந்நாளும் துன்பமில்லை