Tuesday, 23 July 2019

நம்பிக்கை

                                        

               உலகத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது, அளப்பரிய அழகும் அன்பும் ஆற்றலும் தைரியமும் ஒன்றாய் இணையும் புள்ளி நம்பிக்கை, மிகவும் வசீகரமானது, அன்பை போலவே நம்பிக்கையும் பகிர, பகர பெருகும். இவ்வளவு இருந்தும் அது கைக்கொள்ள கொஞ்சம் கடினமானது. 

நாம் உடைந்து விழும் நேரத்திலும், இனி எதுவும் முடியாது என்று தெளிவாக, தெள்ளத்தெளிவாக மூளைக்குத் தெரிந்தபின்னும்கூட ஏற்றுக்கொள்ளாமல் மனம் விட்டுத்தராத மாயாஜாலமான அதிசயம்தான் நம்பிக்கை.

                  அழகான தென்றலில் சிட்டுக்குருவி பறப்பது நம்பிக்கையல்ல , பெரும்புயலின் போது பாறைபோல் நிற்பது நம்பிக்கை. எவ்வளவு இருட்டு என்றாலும் ஒரு சிறு விளக்கு போதும் அதுபோலவே எவ்வளவு மோசமான நிலையிலும் ஒரு சிறு நம்பிக்கை போதும்.

              கண்பார்வையற்ற காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு பெண் உலகின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர், ஹெலன் கெல்லர். பதின்ம வயதுவரை அடிமையாக சோற்றுக்கே வக்கின்றி இருந்த ஒருவனுடைய சாம்ராஜ்ஜியம் அலெக்சாண்டர், கிரேக்கம் , நெப்போலியன் என அனைவரது அரசை விடவும் பெரியது, அவன் பயன்படுத்திய ஆயுதங்கள் வில்,அம்பு , ஈட்டி வாள் சத்தியமாக அவ்வளவுதான், செங்கிஸ்கான். காதே கேட்காத ஒருவன் உலகின் தலைசிறந்த இசைஅமைப்பாளன் பீத்தோவன். பிறக்கும் முன்பே தந்தையை இழந்து, காட்டில் வளர்ந்து, உயிருடன் தீ வைக்கப்பட்டு தப்பித்தவன் இன்றும் தமிழகத்திற்கு சோறு போடுகிறான், கரிகால் சோழன். 77 வயதிற்கு மேலும் மார்பக புற்றுநோயுடன் போராடி வென்ற பாட்டி....இன்னும் எவ்வளவோ இருக்கின்றன நம்பிக்கை சான்றுகள். 

           ஆனால் நமக்கேன் இன்னும் பயம், எதிர்மறை எண்ணங்கள்? நம்மிடம் அன்பு காட்டுபவரை புறக்கணிக்கின்றோம், அவர்கள் மனதை மதிப்பதுமில்லை. நம்மையும் நாமே காயப்படுத்திக்கொள்கிறோம். மறந்துவிடாதீர்கள், மற்றவரிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு பெயர் அன்பு, நம்மிடம் நாம் வைக்கும் அன்புக்கு பெயர் நம்பிக்கை.  

           அதிசயங்கள் நிகழ்வது மந்திரத்தால் அல்ல நம்பிக்கையால். அது பூந்தோட்டம் கிடையாது, முட்காட்டில் காலுக்கு செருப்பு, இருட்டில் தீபம். உங்கள் சிறகுகள் பறிக்கப்படும்போதும், கைகள் கட்டப்படும்போதும் நம்புங்கள், உங்களால் இதை தாண்டி வர முடியும் என்று. உங்களுக்கு கண்டிப்பாக ஒரு துணையும் நிறைய துணிவும் உண்டென்று.
                நான் இருக்கிறேன் உனக்கு என்ற வார்த்தையின் மந்திரசக்தியை நாம் பலரும் மறந்துவிட்டோம், நாம் எதிர்பாராத போது மனதுக்கு நெருக்கமான ஒருவரிடம் இதனை கேட்கும்போது கிடைக்கும் ஆறுதலும் சிலிர்ப்பும் தெம்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நம்மில் பலரும் அதனை சொல்வதே இல்லை.  அதைப்போலவே நம்பிக்கை இருக்கிறது எனக்கு இது கண்டிப்பாக சரியாகும்  என்பதும் மிகவும் அவசியமான ஒன்று.

           பக்தி, வீரம், தியாகம் அனைத்தும் இழைக்கப்பட்டது நம்பிக்கை என்னும் அதிசய நூலால்தான். உலகில் எப்போதுமே நல்லவர் கெட்டவர் என்று கிடையாது , பலம்பெற்றவர் பலவீனன் அவ்வளவேதான், தன்னிலையில் தடுமாறாமல் திமிரோடும் நிற்பவர் பலசாலி மற்றவர் பலவீனர், அவர்கள் தங்களை மட்டுமின்றி அனைவரையும் வெறுமைக்கு ஆளாக்கி விடுவார்கள்.

        நமக்கு நம் நிலை மாறாமல் நிற்கவும் அதில் நடக்கவும் உதவுவது தைரியமும், நாம் கொண்டது சரியென்ற நம் நம்பிக்கையும்தான். நாம் நம்புவோம் இனி எல்லாம் இன்பமாக இருக்கும் என்று, நமக்கு நிறைய நிறைவாய் அன்பு கிடைக்கும் என்றும் நாம் அதையே திரும்பத்தருவோம் என்றும்.

       நாம் தளரும்போது நம்பிக்கை நம் காதில் முணுமுணுப்பது இதுதான், ஏனென்றால் நம்பிக்கை இருந்தால் அது கடைசியாக இருக்காது. எதுவாக இருந்தாலும் அது நன்றாகவே முடியும் இல்லாவிட்டால் அது முடிவல்ல , அதற்க்கு நமக்கு தேவை நம்பிக்கை மட்டுமே. நான் உறுதியாக நம்புகிறேன், நமக்கு இனி எல்லாம் நன்றாகவே நடக்கும்.

13 comments:

  1. மற்றவரிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு பெயர் அன்பு, நம்மிடம் நாம் வைக்கும் அன்புக்கு பெயர் நம்பிக்கை.

    Excellent line.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு சகோ

    ReplyDelete
  3. மற்றவரிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு பெயர் அன்பு, நம்மிடம் நாம் வைக்கும் அன்புக்கு பெயர் நம்பிக்கை.


    Semma.

    ReplyDelete
  4. Good thinking & writing. keep going on this way for your all success. 👍🏼👌🤝👏😊

    ReplyDelete

Railway Colony - Part I Railway Institute

                            Railway Colony, its not just any other colony for railwaymen and their family live, it was a place for us where ...