Sunday, 1 December 2019

ஆற்றல்

              ஆற்றல் என்பது ஒன்றை நிகழ்த்த தேவையான திறன். சில சமயங்களில் எதுவும் நம்மை வீழ்த்தாதிருக்க தேவையான திறனும் கூட. அதற்கு பற்பல பரிமாணங்கள் உண்டு.
    ஆற்றல் போல பெண் பல பரிணாமங்களில் பற்பல பரிமாணங்களில் வெளிப்படுவதால்,மகவாக, அன்னையாக, தோழியாக, மனையாளாக, இறைவியாக இன்னும் பல சமூக பரிமாணங்களிலும்  நமது முன்னோர் பெண்ணை சக்தி என புரிந்து கொண்டனர். அதனாலோ என்னவோ உருவாகும் கருவனைத்தும் பெண்ணாகவே உருவாகும், அவை ஆணவதும் அப்படியே இருப்பதும் இயற்கையின் செயலே. ஆற்றலும் அப்படித்தான் அது நேர்மறையாவதும் எதிர்மறையாவதும் நமது செயலே நாம்தானே இயற்கை.
               ஆற்றல் அல்லது சக்தி அவ்வளவு அளப்பரியது என்றால் நம்மால் அதை கையாளவும் கையகப்படுத்தவும் முடியுமா? அதுதான் இயற்கையின் இன்னொரு சுவாரசியம். எதையும் செய்ய தேவையான ஆற்றலை அடைவதே பெரிய ஆற்றல்தான். நாமனைவரும் அறிந்த அறிவியல் கூற்றுப்படி ஆக்கவும் அழிக்கவும் முடியாத ஆற்றல் மாற்றம் மட்டுமே அடையவல்லது . நமது மன ஆற்றல் நமது வாழ்வாகவும் வெற்றியாகவும் மாறுவதைப்போல.
                 நம் அனைவருக்கும் இயற்கை பிறப்பிலே வைத்தளித்த ஆற்றலை அடைய, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் ஒரு சிட்டிகை பொறுமையும் போதும். கொஞ்சம் நேர்மறையான பிடிவாதமும்.
                 அனைவருக்கும் ஒன்றுபோல் இல்லாத ஆற்றல் அதை ஒன்றுபோல் வெளிப்படுத்துவதும் இல்லை. ஆனால் கண்டிப்பாக நமக்குள் நாம் வெளிப்படுத்த அது புழுங்கிக்கொண்டேயிருக்கிறது, அடைபட்ட புலிபோல், கூண்டுக்கிளி போல், கருவுதித்த சிசுபோல் எப்போதும் தன்னை உலகிடை வைக்க நமக்குள் உள்ளது. ஆனால் பொதுவில் ஒன்று உள்ளது, வலி, அதைக் கடக்காமல் ஒருபோதும் நமது ஆற்றல் வெளிப்படாது, அது சிசுவானாலும் சரி, அடிபட்ட புலியானாலும் சரி. இந்த திறன் அல்லது திறமை பற்பல இடங்களில் பற்பல பொருள்படும். உளத்திறன் அல்லது மனத்திறன் அதுதான் அனைத்துக்கும் மூலக்கூறு.  அன்பு, கோபம், உடல்வலிமை, வலி, பொறுமை, ஊக்கம் இவையனைத்துமே மனித ஆற்றலின் வெவ்வேறு பரிமாணங்கள். மிக முக்கியமாக இவையனைத்துமே ஒரே நூலிலான மாலை எனலாம்.
               உங்களது காதல் தோற்று மனம் நொறுங்கி அடங்கிப்போனால்  அல்லது வறுமை விரட்டி இதுதான் வாழ்க்கை என்று ஒத்துக்கொண்டால் அல்லது எந்தொரு விழைவையும் விளைத்துக்கொள்ள முடியாமல்  சோர்ந்தால் அல்லது இதுதான் நிதர்சனம், யதார்த்தம் நடைமுறை  என கேவலமான கீழ்த்தரமான சமாதானங்களை சொல்வீர்களென்றால் உடனே செத்துவிடுவது அதிஉத்தமம்.
               எனது வாழ்க்கையை நான் வாழ்ந்தே தீருவேன் அல்லது வாழும்வரை அதற்கு முயன்றே தீருவேன் என்றால் நினைவில் கொள்ளுங்கள், நமக்காக மட்டும்தான் இந்த உலகம் உள்ளது,புவி சுழல்வது, அனைத்துமே. இந்த பிடிவாதம்தான் நான் மேற்கூறிய மாலையை கட்டிய நூல்.
                 புற்றுநோய் வந்த டெர்ரி பாக்ஸ் ஒரு விசேஷ உடற்திறனாளி ஆனால் அவரது ஓட்டத்தை இன்றும் உலகம் நினைவுகூர்ந்து தொடர்கிறதென்றால் அது அவரது பிடிவாதத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது, அதுவே அவரது ஆற்றலும்கூட. நாட்டின்மீது அளப்பரிய அன்பும் பொறுமையும் இருந்ததால்தான் 1772ம் வருடம் வெள்ளையரிடம் தோற்ற வேலுநாச்சியார் 1780ம் வருடம் ஹைதர் அலி அவர்களின் உதவியும் பெற்று வெள்ளையரை வெற்றி பெற்றார். இன்றுவரை வெள்ளையரை வென்ற ஒரே பெண்ணரசியாக உள்ளார். அவரது வெற்றி தந்த ஆற்றல் ஊக்கமாக இன்றுவரை அறிவுள்ள பல பெண்கள் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வைக்கிறதுதானே,  போர்முனையில் தற்காலிகமாக பார்வையிழந்தும், அதற்குமுன் ஓவியக்கல்லூரியில் நிராகரிக்கப்பட்டும், பிறப்பிலுருந்தே கொடுமை  மட்டுமே உணர்ந்த ஹிட்லர் ஜெர்மானிய சர்வாதிகாரியாக, வோல்க்ஸ்வேகனின் எந்திரத்தை வடிவமைத்த பொறியாளன் ஆனார் என்றால் அந்த ஆளுமைக்கு இருந்த வலியும் பிடிவாதமுமே காரணிகள். நூற்றாண்டுகளாய் விரட்டப்பட்ட யூதர்கள் தமக்கென தேசத்தை அமைத்து உலகையே உறையவைக்குமளவு வந்ததற்கு அவர்களின் ஆற்றல் நம்பிக்கையும் பிடிவாதமுமே . இரண்டாம் உலகப்போரில் மார்பில் இரண்டு குண்டுகளை வாங்கி பொருளாதாரம் முடங்கி மக்களில் பலர் உடல்ரீதியில் முடமானாலும், மடிந்துபோனாலும் மீண்டெழுந்து உலக நாடுகளிடம் பெற்ற கடன்களை அடைத்து அனைத்திலும்  முதன்மை பெற்றது என்றால் ஓர்மைப்பட்ட அந்த மக்களின் நாட்டன்பும் பிடிவாதமும் முதன்மைக் ஆற்றல்கள்.
          வலிகள் நிறைந்ததல்ல நம் வாழ்க்கை. வலிகள் இருக்கலாம் ஆனால் நம்மால் முடியாதது இல்லை. நன்றாக நினைவிருக்கட்டும், எதை இழந்தாலும் இன்னும் நாம் இருக்கிறோம். வாழ்க்கையில் அனைத்திற்கும் இரண்டாம் வாய்ப்பு உள்ளது ஆனால் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.  ஓநாய்களால் குதறப்பட்டு, வல்லாதிக்க துரோகங்களால் சிதைக்கப்பட்டு கற்பழிப்புகளும், கொலைகளுமே கண்ட ஈழ சொந்தங்கள்கூட கவிதை இசை என கலைவடிவங்களை அமைக்கின்றனர். அரசியல்தளங்களில்  அப்படியொரு அர்ப்பணிப்போடு இயங்குகின்றனர் அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு ஒப்பற்ற மனிதரின் அன்பும் வழிகாட்டலும் கிடைத்தது மட்டுமல்ல, மனித இனத்தின் மந்திரச்சொல்லான நம்பிக்கையும் எப்படியும் எழுந்ததாக வேண்டுமென்ற பிடிவாதமும் இதுதான் அவர்களின் ஆற்றல்.
            இவையனைத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் நம்மால் முடியாதா ? சாதிக்கவும் வாழவும்..... போனது போகட்டும் இப்போதிருந்து தேடுவோம் நமது பலம் என்ன என்பதை. ஏமாற்றமே அடைந்ததில்லை என்பதுபோல் அளவின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவோம் , வெற்றியை கனவில்கூட கண்டதில்லை என்பதுபோல் விடாமுயற்சி செய்வோம், தோல்வியை கேள்விப்படாதவர்போல் செயல்புரிவோம். மகிழ்ச்சி மட்டுமே நமது நிகழ்வாக மாறும். நமது வாழ்வு விழாவாக மாறும்.









4 comments:

  1. Wow. Nice machan .especially எதை இழந்தாலும் இன்னும் நாம் இருக்கிறோம், and last ஏமாற்றமே அடைந்ததில்லை என்பதுபோல் அளவின்றி அனைவரிடமும் அன்பு காட்டுவோம். Awersome man. ❤💪💪💪💪

    ReplyDelete

Railway Colony - Part I Railway Institute

                            Railway Colony, its not just any other colony for railwaymen and their family live, it was a place for us where ...